ADDED : செப் 13, 2026 05:41 PM
மாநகரில் தொடரும் வழிப்பறி வடவள்ளி: கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் அன்சாத். விநாயகர் கோவில் வீதியில் நண்பருடன் நடந்து சென்றார். குடிபோதையில் வந்த, அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். அச்சத்தில் ரூ.500 கொடுத்ததும், அருகில் நின்றிருந்த அவர் வாகனத்தை சேதப்படுத்தி சென்றார். புகாரின் பேரில் விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
உக்கடம்: கணபதியை சேர்ந்தவர் ராஜன; பெயின்டர். புல்லுக்காட்டில், பணி முடிந்து நடந்து சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த சந்துரு வழிமறித்து பணம் கேட்டார். மறுத்ததால், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார். ராஜன் சத்தமிட்டதால், அருகிலிருந்தவர்கள் வந்தனர். சந்துரு தப்பினார். பெரியகடை வீதி போலீசார் விசாரிக்கின்றனர்.
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டி பேக்கரியில் பணிபுரிபவர், புதுக்கோட்டையை சேர்ந்த மதன். அத்திப்பாளையம் ரோட்டில், வாகனத்தை நிறுத்தி போனில் பேசினார். அப்போது அவரை சின்னவேடம்பட்டியை சேர்ந்த தாமீஸ் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். பொதுமக்கள் நடமாட்டம் கண்டதும் தப்பினார். புகாரின் பேரில் போலீசார் தாமீஸை கைது செய்தனர்.
சிங்காநல்லுார் : ஒண்டிபுதுாரை சேர்ந்த செந்தில்குமார், பாலம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றார். அங்கு வந்த சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். செந்தில்குமாரின் சட்டை பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அருகில் இருந்தவர்கள் வந்ததால் கும்பல் தப்பியது. புகாரில், வி.ஆர்.புரம் ஸ்ரீஹரி, காமாட்சிபுரம் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
மது பாரில் தகராறு; இருவர் கைது சாய்பாபாகாலனி: கோவில்மேட்டில் உள்ள டாஸ்மாக் மது பாரில், குடித்துவிட்டு சிலர் ரகளையில் ஈடுபட்டனர். ஊழியர் யுவராஜ் அவர்களை எச்சரித்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குடிபோதையில் இருந்த மதன், சதிஸ்குமார், மனோஜ் ஆகியோர் யுவராஜை தாக்கி, காலி பீர்பாட்டிலை உடைத்து கொன்று விடுவதாக மிரட்டினர். புகாரின் பேரில், மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்த மதன், இடையர்பாளையத்தை சேர்ந்த சதிஸ்குமாரை கைது செய்தனர்.
புகையிலை பொருள் விற்ற இருவர் கைது சிங்காநல்லுார்: போலீசார் ரோந்து சென்ற போது, இருகூர் ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லுாரில் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினித்தை கைது செய்தனர்.
சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது, ராமகிருஷ்ணா தண்ணீர் தொட்டி அருகே பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்றது தெரிந்தது. இதன்படி, சிவகங்கையை சேர்ந்த காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற ஒருவர் கைது பீளமேடு: போலீசார் அன்னை வேளாங்கன்னி நகரில் கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, சவுரிபாளையம் பாலாஜி, முருகன் ஆகியோரிடம் விசாரித்தனர். சோதனையில், 1.100 கிலோ கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்து கைது செய்தனர்.
