மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
சுல்தான்பேட்டை அடுத்த வலசுபாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 62. விவசாயி. மூத்த மகனுடன் வசித்து வந்த காளிமுத்துவுக்கும், இளைய மகன் பாஸ்கருக்கும் சொத்து பிரித்து கொடுப்பதில் பிரச்னை இருந்துள்ளது.
கடந்த, 22 ம் தேதி காளிமுத்துவுடன் பாஸ்கர் தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். காயமடைந்த முதியவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூத்த மகன் அளித்த புகாரின் பேரில், பாஸ்கரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று இறந்தார். இதையடுத்து, கொலை மிரட்டல் வழக்கை,கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டு
துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, லட்சுமி நகரில் வசிப்பவர் பிரசாந்த், 32. இவர் தனது நண்பருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தைகாணவில்லை.
செப்டிக் டேங்கில் விழுந்த முதியவர் மீட்பு
செலக்கரச்சலை சேர்ந்தவர் ராஜகோபால், 82. நேற்று மாலை வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது, செப்டிக் டேங்க் மீதிருந்த 'சிலாப்' உடைந்து, ராஜகோபால் உள்ளே விழுந்தார். உடனடியாக சூலுார் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

