லாரி மோதி இருவர் பலி
கோவை விளாங்குறிச்சி, அம்மன் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் மாணிக்கம், 21. டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர், சேரன் மாநகரச் சேர்ந்த சிவராஜ் மகன் அருண்குமார், 19. இவர் கோவை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் மாலையில், மோட்டார் பைக்கில் இருவரும் காளப்பட்டியிலிருந்து, விளாங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் பைக்கை மாணிக்கம் ஓட்டினார். விளாங்குறிச்சி சாலையில், எஸ்.பெண்ட் அருகே, எதிரே வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது.இதில் பைக் ஓட்டிச் சென்ற மாணிக்கம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். உடன் வந்த அருண்குமார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கோவில்பாளையம் போலீசார் லாரி டிரைவர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் திருடியவர் கைது
தேவம்பாளையத்தை சேர்ந்த போதராஜ் மகன் ராமர், 25. வெல்டிங் தொழிலாளி. இவர் தனது வீட்டு முன் நிறுத்தி இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள யமஹா மோட்டார் பைக் கடந்த 10-ம் தேதி திருட்டு போனது.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடியவரை தேடி வந்தனர். 'சி.ச.டி.வி.,' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் தூத்துக்குடி மாவட்டம், லிவஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 24 என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் செயின் பறிப்பு, கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. கார்த்திக் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அடையாளம் தெரியாத உடல்கள் மீட்பு
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தனியார் ஜாம் கம்பெனியின் பின்புறம் உள்ள தனி நபர் தோட்டத்தில் சுமார் 30 வயதுள்ள அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக, நேற்று முன் தினம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் இறந்தவரின் வலது பக்க மார்பில் சுகன்யா என தமிழில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதே போல் மேட்டுப்பாளையம் காரமடை செல்லும் சாலையில் சுமார் 60 வயதுள்ள அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த இரு உடல்களையும் மீட்ட போலீசார், உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.