பெண் குழந்தை உயிரிழப்பு சூலூர் அருகே பிறந்து, 49 நாட்களே ஆன, பெண் குழந்தை, உடல் நல குறைவால் உயிரிழந்தது.
சூலூர் அடுத்த ரங்கநாதபுரதத்தை சேர்ந்த தம்பதி முருகன் - ஜானகி. இவர்களுக்கு, கடந்த மாதம், 2 ம்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போதே குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, 15 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு பால் குடித்த குழந்தைக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையை சூலூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெயின்டர் கைது மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் ரவி, 52. மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி மகன் பிரதீப், 21. பெயின்டர். இவர் ரவியின் வீட்டிற்கு மது போதையில் அடிக்கடி வந்து பேசி செல்வது வழக்கம். இது ரவிக்கு பிடிக்காததால் அவர் பிரதீப்பை வீட்டிற்கு வர வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தார்.
இதனிடையே, கடந்த 19ம் தேதி இரவு பிரதீப் மதுபோதையில் ரவியின் வீட்டிற்கு வந்தார். இதனால் கோபமடைந்த ரவி, பிரதீப்பை வீட்டிற்கு வர வேண்டாம், எதற்கு வந்தாய் என கேட்டுள்ளார். இதையடுத்து,ஏற்பட்ட தகராறில் பிரதீப் கத்தியால் அவரை குத்தினார். இதில் ரவிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.-----

