
-மூதாட்டி பேரனிடம் ஒப்படைப்பு சூலூரில் கடந்த சில நாட்களாக, 65 வயது மூதாட்டி ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் சுற்றி திரிந்தார். சூலூரில் தனது மகன் இருப்பதாகவும், எனக்கு ஒரு போன் பண்ணி தாருங்கள் என ரோட்டில் செல்வோரிடம் கேட்டு வந்தாக கூறப்படுகிறது. ஒன்பது எண்களை மட்டுமே மூதாட்டி கூறியுள்ளார். அதனால், அவரது உறவினரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் அறிந்த போலீசார் மூதாட்டியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து உணவு வாங்கி கொடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் தாராபுரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சேர்ந்த ராஜேஸ்வரி, 65 என்பது தெரிந்தது. அவரது புகைப்படத்தை, வாட்ஸ் அப் குழுக்களுக்கு போலீசார் அனுப்பினர். அதன் பயனாக, பல்லடத்தில் இருந்து மூதாட்டியின் பேரன் செல்லத்துரை வந்து, தனது பாட்டியை அழைத்து சென்றார்.
360 கிலோ குட்கா பறிமுதல் அவிநாசி ரோடு வழியாக காரில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை சங்கோதிபாளையம் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் வேகமாக சென்றது.
போலீசார் காரை துரத்தி சென்று சுற்றி வளைத்தனர். உடனே காரை ஓட்டி வந்த நபர், தப்பி ஓடினார். காரை சோதனை செய்ததில், 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடக பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட்டுகள் சிக்கின. கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
லாரி பேட்டரி திருடியவர் கைது மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப், 55. இவர், காரமடை அருகே ஆட்டோ கேரேஜ் நடத்தி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி மாலை கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், கடையின் முன்பு இருந்த 3 லாரி பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்து, முகமது ஆரிப், காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பேட்டரி திருடியது ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிஹரசுதன், 29, என தெரியவந்தது. நேற்று முன் தினம் ஹரிஹரசுதனை போலீசார் கைது செய்து, 3 பேட்டரிகளைபறிமுதல் செய்தனர்.
----வாகனம் மோதி முதியவர் பலி கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் காரவனத்தான், 82. இவர் சில ஆண்டுகளாக கோவில்பாளையம், லட்சுமி நகரில், குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கோவில்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் பாதையில் நடந்து சென்றபோது, செங்காளிபாளையம் அருகே அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

