/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளிறங்கு குழிகள் சேதம்; சீரமைக்க கோரிக்கை
/
ஆளிறங்கு குழிகள் சேதம்; சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 26, 2025 09:10 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ஆங்காங்கே சேதமடைந்து காணப்படும் பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடியை மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் கடந்த, 2016ம் ஆண்டு, 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 170 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆளிறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சில பகுதிகளில் ஆளிறங்கும் குழியின் மூடி சேதமடைந்துள்ளது. இவை பெரும்பாலும் நடுரோட்டில் காணப்படுவதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
பொள்ளாச்சி வெங்கடேசாகாலனி ரோட்டில் அமைந்துள்ள ஆளிறங்கு குழியின் மூடி சேதமடைந்து, கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர், நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது.
மக்கள் கூறுகையில், 'ரோட்டின் நடுவே, பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அடிக்கடி கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, ஆளிறங்கு குழியின் மூடி சேதமடைகிறது. அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அவ்வப்போது துறை ரீதியான அதிகாரிகளின் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.