/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
/
பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 10, 2025 10:00 PM

பொள்ளாச்சி; திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு வரும், 27ம் தேதி முதல் தண்ணீர் திறக்க திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நீர் இருப்பு வைத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஜன., மாதம், 29ம் தேதி முதல் ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த, 3ம் தேதியுடன் மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்தது.
இதையடுத்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம், திட்டக்குழு உறுப்பினர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.வரும், 27ம் தேதி முதல், நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 135 நாட்களில் உரிய இடைவெளியில் ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும், மொத்தம், 10,250 மில்லியன் கனஅடி நீர் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 94,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இதே போன்று, முதல் மண்டல பாசனத்துக்கும், ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பதாகவும், அரசு உத்தரவு பெறப்பட்டதும் பாசனத்துக்கு நீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு, கூறினார்.