/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை
/
நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை
ADDED : நவ 01, 2025 12:01 AM
வால்பாறை: வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பல்வேறு கடைகள் உள்ளன. மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர் புறு வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில், 22 தள்ளுவண்டி வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டன.
வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறு நகர், கவர்க்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இந்த தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து, சிலர் கடைகளை வைத்துள்ளனர்.
ஆளும்கட்சியினர் ஆதரவில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். மத்திய அரசால் வழங்கப்பட்ட தள்ளுவண்டிக்கடைகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்க அறிவுறுத்த வேண்டும்.
பொதுமக்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் இதர வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி ஒழுங்குபடுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

