ADDED : ஜன 14, 2025 06:31 AM
கோவில்பாளையம்; கோவை மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து, பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த, கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து, எஸ். எஸ்.குளம் ஒன்றிய பா.ஜ., சார்பில், கீரணத்தத்தில், நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கார்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை திட்டத்தில், இந்த ஊராட்சி மக்கள் வேலை பெற முடியாது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் அதிகரிக்கும். எனவே, கீரணத்தம் ஊராட்சி யாக தொடர வேண்டும். கோவை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது,' என கோஷம் எழுப்பினர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேஷ், மாநில நிர்வாகி தண்டபாணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

