- நமது நிருபர் -
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி, மடியேந்தும் போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் மாசிலாமணி, கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
மாநில தலைவர் கலா உள்பட சத்துணவு ஊழியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், எதிர்ப்பை தெரிவிக்கும்வகையில், கண்ணில் கருப்பு துணி கட்டி, கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்; மடியேந்தி, பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.
சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காத, திருப்பூர் மாவட்ட சத்துணவு துறையை கண்டித்தும்; உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள, 130 க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், 1,500க்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடம் காலியாக உள்ளது.
சமையலர் காலிப்பணியிடங்களை, போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

