ADDED : மார் 06, 2026 05:17 AM

கோவை: கோவை, கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மற்றும் வனத்துறை சார்பில், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னார் வனப்பகுதியில் பழங்குடியினருக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பொறுப்பாறு, ஆட்டுமலை, மஞ்சம்பட்டியைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசின் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
புடலை, அவரை, கீரை, கொத்தவரை, தட்டைப்பயறு, முள்ளங்கி, சின்னவெங்காயம் ஆகிய காய்கறி விதைகள், தக்கைப்பூண்டு, ராகி விதைகள், பெரிய வாளி, நாற்காலி, கதிர் அரிவாள், மண்வெட்டி, சோலார் டார்ச் லைட், புகையில்லா விறகடுப்பு, களைக்கொத்து, திரவ வெல்லம், உயிர் உரங்கள், 1000 மீ., நீளமுள்ள பைப், பவர் டில்லர், இஞ்சி சாகுபடி குறித்த கையேடு ஆகியவை வழங்கப்பட்டன.
சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், விதைநேர்த்தி ஆகியவை குறித்து வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் பயிற்சி அளித்தனர்.
கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ், முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப், மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
