ADDED : மார் 25, 2025 10:23 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில் ஈசனை தரிசித்து விட்டு, இறங்கிக்கொண்டிருந்த பக்தர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சிவா,40. இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், பெங்களூருவில் வசித்து வருகிறார். சிவா தனது உறவினர்களுடன், நேற்றுமுன்தினம் இரவு, வெள்ளியங்கிரி மலை ஏறிவிட்டு, நேற்று அதிகாலை கீழே இறங்கிக்கொண்டிருந்தார்.
மூன்றாவது மலை இறங்கும்போது, சிவாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, வனத்துறையினரின் உதவியுடன் அடிவாரத்திற்கு துாக்கிக்கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சிவா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
