ADDED : மார் 07, 2026 06:03 AM
தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறி சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பருவை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 60. இவர், வெள்ளியங்கிரி மலை ஏற, நேற்றுமுன்தினம் வந்துள்ளார். ஏழு மலைகளை ஏறி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.
முதல் மலையில், அடிவாரத்திற்கு, 20 மீட்டர் தொலைவு வந்தபோது, செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை கண்டவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விரைந்து சென்று, அவரை மீட்டு, அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், செந்தில்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
