ADDED : செப் 23, 2011 09:44 PM
குறிச்சி : 86 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நின்றிருந்த
இருவரை, போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில், கள்ள நோட்டு
கும்பலின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இக்கும்பலை பிடிக்க
போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை,
போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட்
ரோட்டில் ரோந்து சென்றார். உழவர் சந்தை அருகே சந்தேகப்படும் வகையில்
நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தார்; முன்னுக்கு பின் முரணாக
பதிலளித்தனர். அவர்களிடமிருந்த பாலிதீன் கவரை வாங்கி சோதனை செய்தார். ரூ.86
ஆயிரம் மதிப்புள்ள, 500 ரூபாய் நோட்டுகள் 172 இருந்தன. அவற்றை
பரிசோதித்ததில், அனைத்தும் 'ஜெராக்ஸ்' நோட்டுகள் என தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த எஸ்.ஐ., கனகராஜ் நடத்திய விசாரணையில், வடவள்ளியை
சேர்ந்த கிதர்முகமது(55), என்.எச்., ரோடு, ஜமேதார் வீதியை சேர்ந்த
ஜான்ஷாஅலி(32) என தெரிந்தது. இருவரும் 500 ரூபாய் நோட்டினை ஜெராக்ஸ்
எடுத்து, பெட்ரோல் பங்க், கறிக்கடை உள்ளிட்ட கூட்டமான இடங்களில் மாற்றி
வந்ததும் தெரிந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று இருவரையும்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.