குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால் தவிப்பு! : பொள்ளாச்சியில் அலைமோதும் மக்கள்
குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால் தவிப்பு! : பொள்ளாச்சியில் அலைமோதும் மக்கள்
UPDATED : செப் 18, 2026 06:09 PM
ADDED : செப் 18, 2026 05:02 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால், பொதுமக்கள் குடிநீருக்காக அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் இருந்து நீர் எடுத்து, சுத்திகரிப்பு செய்து, நீரேற்று நிலையத்தில் இருந்து, தினமும், 14 மில்லியன் லிட்டர் குடிநீர் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்படுகிறது.
மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொதுக்குழாய் இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல், கிணற்று தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும், இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீரும், ஒருநாள் விட்டு ஒரு நாள் மற்ற பயன்பாட்டுக்கும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 10 நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
குடிநீர் வினியோகம் திடீரென தடைப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குடிக்க நீரின்றி விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. ராஜாமில் ரோடு, அமைதி நகர் பகுதிகளிலும் மக்கள் குடிநீருக்காக அலைமோதுகின்றனர்.
நகரப்பகுதிகளில் குழாய்கள் புதுப்பிக்கும் சூழலில் குடிநீர் வினியோகத்தில் திட்டமிடல் இல்லாததால் பிரச்னை நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நீர் உந்து நிலையத்தில், இரண்டு மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு, நீர் வினியோகம் செய்யப்பட்டது. அதில், ஒன்று அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு பழுதாகிய மோட்டார் சரி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இங்கு இருந்த ஒரு மோட்டார், பழுதானதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சீராக குடிநீர் வினியாகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
