/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர்க்காவல் படையில் சேர மாவட்ட காவல்துறை அழைப்பு
/
ஊர்க்காவல் படையில் சேர மாவட்ட காவல்துறை அழைப்பு
ADDED : பிப் 16, 2024 12:04 AM
பெ.நா.பாளையம்;கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர, கோவை மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில், 50 ஆண் ஊர்க்காவல் படை பணி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டி உள்ளது. ஊர்க்காவல் படையில் சேர, விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஊர் காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து இம்மாதம், 17ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்திலோ வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இம்மாதம், 17ம் தேதி மாலை, 5.00 மணிக்குள் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஜன., 31ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 50 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி உடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான டி.சி., அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், கோவை மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், பொது நல தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஊர்க்காவல் படையில் குறைந்தது, 3 ஆண்டு பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.