போஸ்ட்மேன் வேலை பார்த்த தி.மு.க. உடன்பிறப்புகள்!
போஸ்ட்மேன் வேலை பார்த்த தி.மு.க. உடன்பிறப்புகள்!
ADDED : ஏப் 08, 2026 06:19 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளுக்கு பின், கோவை மாவட்டத்தில் 6.50,599 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். புதிய வாக்காளர்களாக 1.5 லட்சம் பேர் இணைக்கப்பட்டனர் .
இப்புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் பிரிவு, தபால் அலுவலகம் வாயிலாக சம்பந்தப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைத்தது.
தி.மு.க.வினர், போஸ்ட்மேன்களை தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து அத்தனை வாக்காளர் அடையாள அட்டைகளையும், கையொப்பம் இட்டு பெற்றுக்கொண்டு, வீடு வீடாக டெலிவரி செய்ததாகவும், பல தொகுதிகளிலும் இந்த விதிமீறல் நடந்துள்ளதாகவும் கூறுகிறார் பா.ஜ.மாவட்ட செயலாளர் கவிதாராஜன்.
அவர் கூறியதாவது:
தி.மு.க.வினரின் தபால் டெலிவரி பணியை அறிந்த பா.ஜ. தொண்டர்கள் ராமநாதபுரத்திலுள்ள சண்முகத்தேவர் வீதி, பூசாரி மாரியப்பன் வீதியிலுள்ள தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில், இருந்து வாக்காளர் அடையாள அட்டைகளை மீட்டனர்.
போஸ்ட் மாஸ்டர் பிரியாவிடம் புகார் செய்தனர். டெலிவரி செலானில் ஒரே மாதிரி கையொப்பத்தை அனைவருக்கும் இட்டு வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றது தெரிந்தது. உண்மையான வாக்காளர்களுக்கு நேரடியாக கொடுக்க தபால்துறையை அறிவுறுத்தினோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த, கோவை மண்டல முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நந்தா, சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
வாக்காளர் அடையாள அட்டைகளை மொத்தமாக ஒரே நபரிடம் கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட தபால்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் திரும்ப பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு முறையாக டெலிவரி செய்யப்பட்டது. சம்மந்தப்பட்ட தபால்காரர் வேறு சப்டிவிசனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
