/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெனோபாஸ் அறிகுறியுடன் குழப்பிக்கொள்ளாதீர் லேடீஸ்!
/
மெனோபாஸ் அறிகுறியுடன் குழப்பிக்கொள்ளாதீர் லேடீஸ்!
ADDED : ஆக 02, 2025 11:40 PM

'அ டினோமயோசிஸ்!'
இந்த வார்த்தையை, பல பெண்கள் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இது குறித்து ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்கிறார், மகப்பேறு மற்றும் மகப்பேறு இன்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகன்யா வெங்கடேஷ்.
''பொதுவாக, பெண்களுக்கு 40 -50 வயதில் மெனோபாஸ் நிலை ஏற்படுகிறது. மெனோபாஸ் ஏற்படும் முன் அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த கட்டிகள் அதிகரிப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதே அறிகுறிகள், அடினோமயோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டாலும் தோன்றும். ஆகவே, கவனமாக இருக்க வேண்டும்,''
இன்னும் தெளிவாக சொல்லுங்களேன்... ''பெண்கள், 40 வயதை கடந்த பின்னர் மெனோபாஸ் அறிகுறிகள் ஏற்படுவது இயல்பு. அதே சமயம், அடினோமயோசிஸ் பாதிப்பு இருப்பின், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் சமயங்களில் வலி அதிகம் இருக்கும். இது சாதாரணமெனோபாஸ் அறிகுறி என நினைத்து, பலர் சிகிச்சை எடுப்பதில்லை.
இப்பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்தே சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்பநிலையில் அறிந்து கொண்டால், மருந்துகளை கொண்டே சரிசெய்ய இயலும். தாமதமாக வந்தால் கர்ப்பப்பையை அகற்றும் நிலை ஏற்படும்,''
எப்போது பரிசோதிக்க வேண்டும்? ''அதிக வலியுடன் ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், கட்டியாக ரத்தம் வெளியேறுதல் இருப்பின், அடினோமயோசிஸ் சார்ந்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வெள்ளைப்படுதல் என்பது, மாதவிடாய் ஏற்படும் இரண்டு நாட்கள் முன்னும், மாதத்தில் அவ்வப்போது ஏற்படுவது இயல்பு. ஆனால், அடிக்கடி வெள்ளைப்படுதல், அரிப்பு, துர்நாற்றம் இருப்பின், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான 'பேப்ஸ்மியர்' எனும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இப்பரிசோதனை வாயிலாக, எதிர்காலத்தில் இப்புற்றுநோய் வரும் அறிகுறி இருந்தாலும், முன்பே அறிந்து தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இவ்விரு பிரச்னைகள் பெண்கள் மத்தியில் அதிகம் இருப்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும்,''.