/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பணிக்காக மரத்தை வெட்டாதீங்க! மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
/
கட்டுமான பணிக்காக மரத்தை வெட்டாதீங்க! மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
கட்டுமான பணிக்காக மரத்தை வெட்டாதீங்க! மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
கட்டுமான பணிக்காக மரத்தை வெட்டாதீங்க! மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 29, 2025 09:37 PM

ஆனைமலை, ; வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை கட்டுமான பணிக்காக, 11 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு மாற்று நடவடிக்கை எடுத்து மரங்களை பாதுகாக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், தினமும், 200 வெளிநோயாளிகளும், 15 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்ககம், 3.5 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் மருத்துவப்பணிகள் கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறையினர், மருத்துவமனையில் உள்ள பழமையான கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட அளவீடு செய்து பூர்வாங்க பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
புதிய கட்டுமான பணிக்காக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்களில், அடையாள எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரங்களை வெட்டுவதற்கு பதிலாக மாற்று திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் இளைப்பாற, மரங்கள் உதவுகின்றன. தற்போது, மருத்துவமனை கட்டுமான பணிக்காக, 11 மரங்கள் வெட்டப்பட உள்ளன. அதில், பழமையான ஆறு வேப்ப மரங்களும் உள்ளன. மரங்களை வெட்டுவதற்கு பதிலாக பயன்பாடு இல்லாத ஓட்டு கட்டடத்தை அகற்றினால், ஐந்து வேப்ப மரங்களை வெட்டாமல் பாதுகாக்க முடியும்.
மேலும், மரங்களை வேருடன் எடுத்து மாற்று இடத்திலோ, சாலையோரங்களிலோ நடவு செய்யலாம். இதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். மருத்துவமனை பின்பக்கம் உள்ள கலா மண்டப பகுதியில் உள்ள, வாலிபால் விளையாட்டு மைதானத்தை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாம்.
கலா மண்டப பகுதியில், மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தால், பழமையான கட்டடத்தையும், மரங்களையும் பாதுகாக்கலாம். இது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.