பாலியல் குற்றங்களில் புகார் அளிக்க ... தயக்கம் வேண்டாம் :பாதுகாப்புக்கு போலீஸ் கமிஷனர் உறுதி
பாலியல் குற்றங்களில் புகார் அளிக்க ... தயக்கம் வேண்டாம் :பாதுகாப்புக்கு போலீஸ் கமிஷனர் உறுதி
UPDATED : ஜூன் 20, 2026 09:26 PM
ADDED : ஜூன் 20, 2026 09:22 PM

கோவை: பாலியல் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புகார் அளிக்க தயக்கம் காட்ட வேண்டாம்; அவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவுடன் துணை நிற்கும் என, மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, போக்சோ வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி குறுகிய காலத்திலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:
போக்சோ புகார்களில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 60 நாட்கள் அவகாசம் இருந்தாலும் சமீபத்தில் பதிவான புகார்களில், 15, 17 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ புகார்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அச்சமோ, தயக்கமோ கொள்ள தேவையில்லை. புகார் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் பாதுகாப்பை வழங்க, காவல்துறை எப்போதும் உறுதுணையாக இருக்கும். பாலியல் குற்றங்களில் சிக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
