/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
/
நாளை வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
ADDED : டிச 18, 2025 05:04 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு கணக்கெடுப்பு (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நிறைவடைந்த சூழலில் நாளை வரைவு வாக்காளர் பட்டி யலை, கலெக்டர் பவன்குமார் வெளியிடுகிறார்.நேற்று மாலை வரை, நீக்கப்பட்டவர்கள் 6.5 லட்சம் பேர் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கடந்த நவ.,4 முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு கணக்கெடுப்பு பணி துவங்கியது. டிச., 4ம் தேதி நிறைவடைவதாக இருந்தது; டிச.,14 வரை நீட்டித்து நிறைவடைந்தது. கோவை மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளிலும் சேர்த்து, 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில்,1,13,592 பேர் காலமாயினர்.
வீடுகள் பூட்டப்பட்டதாகவும், வீட்டில் ஆட்கள் இல்லை என்றும், 76,096 பேர், முகவரி மாறி சென்றவர்கள், 2,91,928 பேர்.
இரு இடங்களில் ஓட்டுரிமை பெற்றவர்கள், 20,245 பேர், பல காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டவர்கள், 395 பேர் என மொத்தம் 5,02,256 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதாவது, 15.58 சதவீதம் பேர்.
கோவை மாவட்டத்தில் தற்போது உள்ள, 32,25,198 மொத்த வாக்காளர்களில், மேற்சொன்ன பல காரணங்களால், 5,02,256 நீக்கம் செய்யும் பட்சத்தில் மீதமுள்ள, 27,22,942 பேர் மட்டுமே மொத்த வாக்காளர்களாக இருப்பர் என்று, கடந்த 8ம் தேதி மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறினர்.
இந்நிலையில் மேலும் 5 சதவீத வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறினர்.
மாவட்ட தேர்தல் பிரி வினர் கூறியதாவது : கோவை மாவட்டத்தில், 20 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பலர் காலமாகிவிட்டனர். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம் மாறி சென்றனர். அப்படி இடம் மாறி சென்றவர்கள், மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் இருப்பர்.
தற்போதைய மொத்த வாக்காளர்களில், 6,45,039 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.நாளை (டிச., 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நாளை முதல் ஜன.,15 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து, மறுப்பு தெரிவித்து விண்ணப்பிக்கலாம். பிப்.,16ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

