ADDED : செப் 05, 2026 03:42 PM
நாம் எல்லோரும் ஒரு தேனீர் இடைவேளைக்காக காத்திருக்கிறோம். ஒரு கோப்பை தேனீருக்குள் நமக்கான உற்சாகமும், புத்துணர்ச்சியும் ஒளிந்திருக்கிறது.
ஜப்பானியர்கள் தேனீர் பருகுவதை ஒரு சடங்காக பின்பற்றுகின்றனர். ‘இச்சிகோ இச்சிஏ’ (Ichigo Ichie) என்ற தத்துவ கோட்பாட்டுடன் தேநீரை ஒப்பிட்டுகின்றனர்.
‘வாழ்க்கையில் இந்தத் தருணம் மீண்டும் வராது. அதனால் இந்த நொடியை தேனீருடன் முழுமையாகக் கொண்டாடுவோம்’ என்பதுதான், அந்த கோட்பாட்டின் அர்த்தம்.
நம்மை பொறுத்தவரை தேனீர் உற்சாக பானம் மட்டுமல்ல, சிலருக்கு பசியை போக்கடிக்கும் உணவாகவும் இருக்கிறது.
பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ, ஏலம் சுக்கு கலந்த மசாலா டீ வரிசையில் இப்போது மருத்துவ குணம் உள்ள மூலிகை டீ விற்பனைக்கு வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த கிரீன் டீ, துளசி டீ மற்றும் எனர்ஜி தரக் கூடிய லாவண்டர் டீ என, பல வெரைட்டிகள் வந்துள்ளன.
இந்திய தேயிலை வாரிய தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, ‘‘டீ, காபி என்றால் நடுத்தர வயதினர், முதியவர்களுக்கானது என்ற காலம் போய் விட்டது. இன்றைய Gen Z இளைஞர்கள் ஐஸ் டீ, கிரீன் லெமன் டீ, புதினா டீ என, பல வகையான தேநீரை ரசித்து ருசித்து அசத்துகின்றனர். மருத்துவ குணம் உள்ள பல வகை தேயிலை தயாரித்து விற்கிறோம். ரோஸ் மற்றும் சப்ரான் சுவையிலும் கிடைக்கிறது,’’ என்றார்.
‘கொம்புச்சா’ (Kombucha) என்ற ஒரு டீயை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். பீர், ஒயின், கள், நீரா பானம் போன்ற ஒரு தேநீர்தான் இந்த கொம்புச்சா.
இது குறித்து உமா மகேஸ்வரி கூறுகையில், ‘‘இதில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து இருக்கும். பருகினால் உற்சாகம் பொங்கும். ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. இதை விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவா போன்ற நகரங்களில் இதை இளைஞர்கள் அதிகம் விரும்பி குடிக்கின்றனர். நம்மூரில் இது பற்றி அதிகம் தெரியவில்லை,’’ என்றார்.
இதோ சொல்லி விட்டோம்...இனி பாருங்கள்!
