/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமலுக்கு வந்தது இ - பைலிங் நடைமுறை; நீண்ட வரிசையில் காத்திருந்த வக்கீல்கள்
/
அமலுக்கு வந்தது இ - பைலிங் நடைமுறை; நீண்ட வரிசையில் காத்திருந்த வக்கீல்கள்
அமலுக்கு வந்தது இ - பைலிங் நடைமுறை; நீண்ட வரிசையில் காத்திருந்த வக்கீல்கள்
அமலுக்கு வந்தது இ - பைலிங் நடைமுறை; நீண்ட வரிசையில் காத்திருந்த வக்கீல்கள்
UPDATED : டிச 02, 2025 07:47 AM
ADDED : டிச 02, 2025 07:46 AM

கோவை: நீதிமன்றங்களில், இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படுவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு, மின்னணு(இ-பைலிங்) முறையில் தாக்கல் செய்யும் முறை 2023, செப். முதல் பின்பற்றப்பட்டு வந்தது.
சர்வர் பிரச்னை, தொழில்நுட்ப கோளாறு, போதிய பயிற்சியின்மை போன்ற காரணங்களால், அந்த நடைமுறையை நிறுத்தி வைக்க, வக்கீல் சங்கம் போராட்டம் நடத்தியது. இதனால், இ-பைலிங் முறை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
டிசம்பர் 1(நேற்று) முதல், இ-பைலிங் கட்டாயம் என்று, சென்னை ஐகோர்ட் அறிவித்தது. அதை நிறுத்திவைக்க வக்கீல் சங்க கூட்டுக்குழு தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்தது. ஆனால், அது ஏற்கப்படவில்லை. அறிவித்தபடி, மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறை, நேற்று அமலுக்கு வந்தது.
கோவை நீதிமன்ற வளாகத்தில், இ-பைலிங் செய்ய 5 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல ஊழியர்கள் பற்றாக்குறை, சர்வர் தகராறு, ஸ்கேனர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. வக்கீல்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஒவ்வொரு மையத்திற்கும் உடனடியாக கூடுதலாக, 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். கூடுதல் ஸ்கேனர் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், வெவ்வேறு சிக்கல்களால் தாமதம் நீடித்தது.
பிரச்னை தொடர்பாக ஆலோசிக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் அவசர பொதுக்குழு கூட்டம், புதுக்கோட்டையில் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

