இ - ஸ்கூட்டர் வாகனத்துக்கு பதிவு எண்கள் கிடையாது: கேள்விக்குறியாகிறது பாதுகாப்பு
இ - ஸ்கூட்டர் வாகனத்துக்கு பதிவு எண்கள் கிடையாது: கேள்விக்குறியாகிறது பாதுகாப்பு
UPDATED : செப் 16, 2026 08:35 PM
ADDED : செப் 16, 2026 08:32 PM

கோவை: மின் வாகனங்கள் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. மாநகரில் 2025ல் 7,430 இரு சக்கர மின்சார வாகனங்கள், இலகுரக வாகனங்கள் 1,681 உட்பட 9,463 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டன. இந்தாண்டு ஜன., முதல் ஆக., வரை வாகனப் பதிவு 15 ஆயிரத்தை கடந்து விட்டது.
அதிவேகமாக செல்லும் மின் வாகனங்களுக்கு பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், 0.25 கிலோ வாட்(250 வாட்ஸ்) குறைவான மோட்டார் திறன் மற்றும் மணிக்கு 25 கி.மீ., வரையே செல்லும் வேகம் கொண்ட இ-ஸ்கூட்டர்களுக்கு மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி இப்பதிவு எண் தேவையில்லை.
இத்தகைய வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம், காப்பீடு, சாலை வரி போன்ற ஆவணங்கள் அவசியமில்லை. இதனால், பார்சல், பொருட்களை எடுத்து செல்பவர்கள் ஒர்க்சாப், கடைகளுக்கு இவ்வகை ஸ்கூட்டர்களை அதிகம் வாங்குகின்றனர்.
வாகன பதிவு எண் இல்லாத இந்த வாகனங்கள் விபத்து, சேதம் மற்றும் திருட்டு ஆகிய குற்ற சம்பவங்களுக்குள்ளாகும் போது, எதிரே வரும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
காப்பீடு செய்யாத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடும் கோரமுடியாது. சாலையில் இஷ்டத்துக்கு செல்லும் இவ்வாகனங்களால் விதிமீறல்கள் அதிகரித்துள்ளன.
'குறைந்த வேகத்தில் மட்டுமே இந்த இ-ஸ்கூட்டர்கள் இயங்குவதால் குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்பு குறைவு' என்று கூறும் போலீசார், ஆனாலும் பதிவு எண் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என்கின்றனர்.
