ADDED : நவ 02, 2025 11:13 PM

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். ஐப்பசி மாத ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அரங்கநாத பெருமாள் பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார்.
தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை நடந்தது. பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

