UPDATED : மே 21, 2026 04:27 PM
ADDED : மே 21, 2026 04:21 PM

வால்பாறை: பழைய வால்பாறை ரோட்டில் 'வாக்கிங்' சென்ற ஒற்றை யானையை கண்டு தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, குரங்குமுடி, வில்லோனி, பச்சமலை, கவர்க்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், பழைய வால்பாறை பகுதியில் முகாமிட்ட ஒற்றை யானை, அதிகாலை நேரத்தில் ரோட்டில் ஒய்யாரமாக 'வாக்கிங்' சென்றது. இதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் படம் பிடித்தனர். இதனிடையே எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் யானை சென்றதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட்களில் இந்த ஒற்றை யானை உலா வருகிறது. இருப்பினும் யானை யாரையும் துன்புறுத்தவோ, விரட்டுவதோ இல்லை. எதிரே வாகனங்கள் வந்தாலும் வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்தும் செயலில் ஒரு போதும் ஈடுபடக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
