/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு ஒன்றியப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
/
தெற்கு ஒன்றியப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
ADDED : மார் 05, 2024 11:19 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றியப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு புதிய கல்வியாண்டு, 2024 --25க்கான மாணவர் சேர்க்கையை துவங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
அதில், பொள்ளாச்சி ஆர்.கே.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வள்ளியம்மாள், வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் வைஷ்ணவி, பள்ளி தலைமையாசிரியர் பூங்கொடி, மழலையர் கல்வி ஆசிரியர்கள் அகிலா, லட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புதியதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ரோஜாப்பூ வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் திருக்குறள் சொல்வதை கேட்ட மாணவர்கள், அவர்களே அந்த குறள் முழுவதையும் சொல்லி முடித்தனர். இதற்கு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ''தமிழக முதல்வர் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை அரசு பள்ளிகளில் அதிகரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுவரை, 54 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்,'' என்றனர்.

