ADDED : மே 05, 2025 10:35 PM
வால்பாறை; நீலகிரி, கொடைக்கானலை போன்று வால்பாறைக்கும் இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு கோடை விடுமுறையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், வால்பாறையில் பார்க்கிங் வசதி இல்லை. இதனால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல், ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு, பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை சுற்றுலா பயணியர் பயன்படுத்துவதாலும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்வதாலும், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியரின் மனதில் இடம் பிடித்த வால்பாறையின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். இங்குள்ள வனவளம், உயிரினங்கள், நீர் ஆதாரம் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வரவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சுற்றுலா பயணியர் வருகையால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நீலகிரி, கொடைக்கானல் போன்று, வால்பாறை வருவதற்கும் இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
