சுற்றுலா பயணியர் வீசிய கழிவுகள்: சுற்றுச்சூழல்பாதுகாப்பினர் அகற்றினர்
சுற்றுலா பயணியர் வீசிய கழிவுகள்: சுற்றுச்சூழல்பாதுகாப்பினர் அகற்றினர்
ADDED : ஏப் 16, 2026 05:56 PM

வால்பாறை: வால்பாறையில் சாலையோரத்தில், சுற்றுலா பயணியர் வீசியெறிந்த குப்பையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அகற்றினர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இதில், சில சுற்றுலா பயணியர், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் மது அருந்தி, குப்பை கழிவுகளை ரோட்டில் வீசி செல்கின்றனர். சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்லும் சின்னக்கல்லார் அருவி, நல்லமுடிகாட்சி முனை, தலநார் வியூ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் குப்பை மற்றும் காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணியர் வீசி சென்ற குப்பை உள்ளிட்ட கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்களை, ஆனைமலை புலிகள் காப்பக டி.எப்.ஓ., தேவேந்திரகுமார் மீனா உத்தரவு படியும், வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா வழிகாட்டுதலின் படி, கோவை மாவட்ட வனவிலங்கு சுற்றுச்சூழல்பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அகற்றும் பணி நடந்தது.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தலைமையில், கோவை, திருப்பூர், சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, குப்பையை சேகரித்து, வாகனத்தில் கொண்டு சென்று அப்புறப்படுத்தினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறைக்கு கோடை விடுமுறையில் வரும் சுற்றுலா பயணியர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு சமைத்து, கழிவுகளை வனத்தில் வீசுவது வனக்குற்றமாகும்.
வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் சுற்றுலாபயணியர் குப்பை உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
