/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பு; மின்மயானம் அமைப்பதில் சிக்கல்
/
எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பு; மின்மயானம் அமைப்பதில் சிக்கல்
எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பு; மின்மயானம் அமைப்பதில் சிக்கல்
எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பு; மின்மயானம் அமைப்பதில் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2025 11:34 PM
வால்பாறை; மின் மயானம் அமைக்க தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் இடம் தர மறுப்பதால், நகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வால்பாறை மலைப்பகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள மயானம் இடப்பற்றாக்குறையால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், மின் மயானம் இல்லாததால், 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சி மின் மயானத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், மக்களுக்கு வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் மின் மயானம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் கடந்த, 2022ம் ஆண்டு அக். மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில், 50 இடங்களில், 75 கோடி மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்கப்படும்.
கோவை மாவட்டம் வால்பாறை, திருப்பூர், துாத்துக்குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 50 இடங்களில் மின் மயானம் விரைவில் அமைக்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்த பின், மின் மயானம் அமைக்கும் பணி துவங்கப்படும் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1.5 கோடி மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசு அறிவிப்பு வெளியிட்டு, இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் மின்மயானம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ''ரொட்டிக்கடை பாறைமேடு பகுதியில் மின்மயானம் அமைக்க தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் இடம் கேட்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிர்வாகம் இடம் தர மறுத்து விட்டனர்.
இதனையடுத்து, கருமலை எஸ்டேட் பகுதியில் மின்மாயனம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கும், எஸ்டேட் நிர்வாகம் மயானம் அமைக்க அனுமதி வழங்கவில்லை. இதனால், வால்பாறையில் மின் மயானம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.