/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒழுக்க நெறியாளர்களாக உருவாக்கும் நன்னெறி கல்வி!
/
ஒழுக்க நெறியாளர்களாக உருவாக்கும் நன்னெறி கல்வி!
ADDED : மார் 01, 2024 09:12 PM
நன்னெறி கல்வியானது மாணவர்களை உயர்நெறி மனிதர்களாக அல்லது ஒழுக்க நெறியாளர்களாக உருவாக்கும் ஒரு நீதி திட்டமாகும். இக்கல்வியில் நன்னெறிச் சிந்தனை, நென்னெறி உணர்வு, நன்னெறி நடத்தை ஆகியவை போதிக்கப்படுகிறது.
பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளில் உயர்நெறிப் பண்புகளான அடிப்படை மனித உரிமைகள், பிறரிடம் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், சமய நெறிமுறைகளை கடைப்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், நாட்டுப்பற்று உணர்வு கொண்டிருத்தல் ஆகியவற்றை பின்பற்ற கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மேலும் இக்கல்வியானது மரபுத் திறன், சிந்தனைத் திறன், சமூகத் திறன், புத்தாக்கத் திறன் ஆகியவற்றை கற்றுத்தருகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலகட்டத்தில் உலகின் புதிய நூற்றாண்டின் சவால்களை நம்பிக்கையோடும், பொறுப்புணர்வோடும் எதிர்கொள்ள நன்னெறி கல்விமுறை வழிவகுக்கிறது.
ஒழுக்கம்
நன்னெறி கல்வியில் ஒழுக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பண்புடைமை, பணிவுடைமை, பெரியோரைப் போற்றுதல், இன்சொல் கூறல், பிறருக்கு உதவி செய்தல், நல்லோரோடு நட்புக் கொள்ளல், உண்மையைப் பேசுதல், பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தல், மது அருந்தாமல் இருத்தல், புறங்கூறாமல் இருத்தல், பொறாமை கொள்ளாது இருத்தல் போன்ற நற்பண்புகள் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தில் அடங்கும்.
மாணவர் வாழ்க்கை ஆற்றல், ஆர்வம், அறிவுத் தேடல் மற்றும் சுய ஆய்வு ஆகியவற்றால் நிறைந்தது. ஒரு மாணவரின் கல்வி வெற்றி, தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒழுக்கம் அடிப்படையான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கம் மாணவர்களுக்கு நேரத்தை திறமையாக நிர்வகிக்க உதவுகிறது.
ஒழுக்கமான மாணவர்கள் தோல்வியிலும் கூட துவண்டுவிடாமல், தங்கள் இலக்குகளை நோக்கி தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.
நேர்மை
நேர்மை என்பது உண்மையாக இருப்பதைக் குறிக்கிறது. நேர்மையை கடைபிடிக்கும் ஒரு நபர் தனது வாழ்க்கையில் நல்ல முறையில் வாழ்கிறார் என்பதை நன்னெறிக் கல்வி எடுத்துக் காட்டுகிறது. நேர்மையானவர் எப்போதும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது, ஒழுக்கத்தைப் பேணுவது, உண்மையைப் பேசுவது மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவது போன்ற நற்குணங்களை கொண்டுள்ளார்.
மரியாதை
நன்னெறியின் அடையாளம் 'மரியாதை'. மரியாதைக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை சுய மரியாதை மற்றும் பிறருக்கு மரியாதை. சுயமரியாதை என்பது தன்னை நேசிப்பதையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்வதைக் குறிக்கிறது. இது தனக்குள்ள மரியாதையை பிரதிபலிக்கிறது. சுயமரியாதை தனிநபரின் ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது. அத்தகைய நபர் ஒரு நல்ல நெறிமுறை இயல்புடையவர். எனவே, சுயமரியாதை உங்களை சிறந்த நபராக ஆக்குகிறது.
சிறு வயதிலிருந்தே மாணவர்கள் தங்களை தாங்களே மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே பிற்காலத்தில் சமுதாயத்தில் தலைமைப் பண்புடன் திகழ உறுதுணையாக இருக்கும். சக மனிதர்களை அனைவரும் மதிக்க வேண்டும். வயதில் பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். நாம் பிறருக்கு கொடுக்கும் மரியாதை வைத்துத்தான் பிறர் நம்மை மதிப்பர்.
இதுபோன்ற இன்னும் பல நன்னெறிகள் உள்ளன. இவற்றை குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத் தர வேண்டும்.

