தாலுகா அலுவலக கட்டடம் சீரமைக்க... எதிர்பார்ப்பு!பொதுப்பணித்துறை மதிப்பீடு தயாரிப்பு
தாலுகா அலுவலக கட்டடம் சீரமைக்க... எதிர்பார்ப்பு!பொதுப்பணித்துறை மதிப்பீடு தயாரிப்பு
UPDATED : ஜூலை 05, 2026 03:15 PM
ADDED : ஜூலை 05, 2026 03:00 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தாலுகா அலுவலக கட்டடம் கட்டியதில் ஏற்பட்ட சட்டப்பிரச்னை நிறைவடைந்த நிலையில், அந்த கட்டத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டு பொள்ளாச்சி தாலுகாவில் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு, கிணத்துக்கடவு தாலுகா உருவாக்கப்பட்டது.
அதன்பின், 2013ம் ஆண்டு, கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் எதிரே, 2.22 கோடி மதிப்பீட்டில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்காக, பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர், 2013 மே மாதம் அனுமதி வழங்கினார்.
மக்கள் வரிப்பணத்தில், 80 சதவீத கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கரியகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர், மாவட்ட கலெக்டர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கோவில் நிலத்தை, 67 லட்சத்து, 55 ஆயிரத்து, 96 ரூபாய் தொகைக்கு வருவாய்த் துறைக்கு விற்பனை செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, 2019 மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு கடந்த 2025 ஜூன் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டது.
வழக்கு முடிந்து, ஒரு ஆண்டாகியும் தற்போது வரை கட்டடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கட்டடத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
தற்போது, தாலுகா அலுவலகம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு மக்களுக்கு, போதிய அளவிலான இருக்கைகள், கழிப்பிடம், குடிநீர், வாகன பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால், இன்று வரை மக்கள் தங்கள் பணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.
இது மட்டுமின்றி, தாலுகா அலுவலகம் சிறியதாக இருப்பதால் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் புதர் மண்டியும், கட்டடத்தின் ஒரு சில பகுதிகளில் கான்கிரீட் சேதமடைந்தும் காணப்படுகிறது.
இங்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில், தாலுகா அலுவலகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மனு அளிக்கப்பட்டது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுப்பணித்துறை சார்பில், தாலுகா அலுவலக கட்டடத்தை சீரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று கோடி ரூபாய் செலவாகும் என, கூறப்படுகிறது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், விரைவில் கட்டடம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,' என்றனர்.
