/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கறிவேப்பிலை கிலோ ரூ.60; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கறிவேப்பிலை கிலோ ரூ.60; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 17, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்; பனிக்காலம் துவங்கியதால், ஒரு கிலோ கறிவேப்பிலை, 60 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுமுகை, காரமடை, மத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், கறிவேப்பிலை பிரதான விவசாயமாகும்.
மேட்டுப்பாளையம், மத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 3500க்கு மேற்பட்ட ஏக்கரில், செங்காம்பு கறிவேப்பிலை பயிர் செய்து வருகின்றனர். இந்த இலை நல்ல மனமும், சுவையும் இருப்பதால், மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். பனிக்காலம் துவங்கியதால் மகசூல் குறைந்து கறிவேப்பிலையின் விலை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறுகையில், ''அதிக அளவில் பனி பெய்து வருவதால் கொழுந்து இலைகள் கருகி விடுகிறது. இலையின் தேவை அதிகரிப்பதால், நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ, ரூ.40 லிருந்து, 45 ரூபாய்க்கு வியாபாரிகள், தோட்டத்தில் விலை கொடுத்து அறுவடை செய்தனர். இந்த வாரம் கிலோவுக்கு, 50 லிருந்து, 60 ரூபாய் வரை, விலை உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இருந்து கறிவேப்பிலை வந்தாலும், மக்கள் அதிகம் செங்காம்பு இலையை விரும்புகின்றனர்.
அதனால் வியாபாரிகளும், இந்த இலையை கடைகளில் விற்பனை செய்கின்றனர். எனவே மாசி மாதம் வரை விலை உயர்வாக இருக்கும். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.