/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவ்வாழைத்தார் விலை சரிவு :விவசாயிகள் அதிருப்தி
/
செவ்வாழைத்தார் விலை சரிவு :விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 27, 2025 04:51 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் செவ்வாழைத்தார் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்பில் ஊடுபயிராகவும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ - 45, நேந்திரன் --- 30, கதளி --- 30, ரஸ்தாளி --- 35, பூவன் --- 20 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 35 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை கிலோ - 30, கதளி --- 5, ரஸ்தாளி --- 10, பூவன் --- 15, சாம்பிராணி வகை --- 12 ரூபாய் விலை சரிந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் கிலோ 75 ரூபாய்க்கு விற்ற செவ்வாழை, ஒரே வாரத்தில், கிலோவுக்கு 30 ரூபாய் சரிந்துள்ளது, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று அனைத்து வாழைத்தார்கள் விலையும் குறைவாக இருந்தது. குறிப்பாக, செவ்வாழைத்தார் விலை மிகவும் குறைந்துள்ளது. வெளியூர் வரத்து இல்லை. வரும் நாட்களில் வாழைத்தார்கள் விலை அதிகரிக்கும்,' என்றனர்.

