ADDED : செப் 26, 2024 11:31 PM

மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க பகுதிகளில் முக்கியமானது வால்பாறை வனப்பகுதி. இங்கு, தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் அடுத்தடுத்து அமைந்துள்ளதே தனிச்சிறப்பு.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வினவிலங்குகளின் அடர்ச்சி மிக அதிகம். பசுமைமாறாக்காடுகள், அணைகள், நீர்வீழ்ச்சி என, பிரமிக்க வைக்கின்றன. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் ஆண்டு முழுவதும் வருகின்றனர். ஆழியாறிலிருந்து, 40 கொண்டை ஊசிவளைவுகளில் பயணிப்பதை சுற்றுலா பயணியர் ரசிக்கின்றனர். வழித்தடத்தில் உள்ள அட்டகட்டியில் வனத்துறை சார்பில் ஆர்கிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது.
அதை கண்டு ரசித்து, பயணித்தால், பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணைகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு ஆகிய அணைகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இது தவிர, படகுசவாரி, தாவரவியல்பூங்கா, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடிகாட்சிமுனை, நெம்பர்பாறை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு என, சுற்றுலா பயணியர் மனதை கவரும் பகுதிகள் ஏராளம்.
தேயிலை காட்டில் பகல் நேரத்தில் உலா வரும் யானை, காட்டுமாடுகள், மலைப்பாதையில் முகாமிட்டிருக்கும் வரையாடுகள், சிங்கவால் குரங்குகளை ரசிக்காமல் யாரும் நகர முடியாது. வால்பாறையில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் மே மாதம் கோடைவிழாவும் நடத்தப்படுகிறது.

