/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தந்தை இறப்பு; அரசு மருத்துவமனை மீது மகள் குற்றச்சாட்டு
/
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தந்தை இறப்பு; அரசு மருத்துவமனை மீது மகள் குற்றச்சாட்டு
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தந்தை இறப்பு; அரசு மருத்துவமனை மீது மகள் குற்றச்சாட்டு
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தந்தை இறப்பு; அரசு மருத்துவமனை மீது மகள் குற்றச்சாட்டு
ADDED : செப் 11, 2025 10:15 PM
கோவை; ரத்த வாந்தி மற்றும் வலிப்பு நோய்க்காக, கோவை அரசு மருத்துவமனையில், ஆக., மாதம் அனுமதிக்கப்பட்ட முதியவர் மோதன்தாஸ், 62, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
கோவை அருகே வெள்ளானைபட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி, 32. இவர், ஆக., 18ல் தந்தை மோகன்தாஸ், 62, அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
உரிய சிகிச்சை வழங்காததால், 19ம் தேதி இரவு தந்தையை 'டிஸ்சார்ஜ்' செய்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., எடுத்து பார்த்தபோது, மூளையில்ஏழு இடத்தில் நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்ததாகவும், முதலுதவி சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 21ம் தேதி மோகன்தாஸ் இறந்து விட்டார்.
இதுதொடர்பாக, ஸ்ரீ லட்சுமி கூறியதாவது:
என் தந்தை தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்ததாலும், வலிப்பு காரணமாகவும், ஆக., 18ல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினோம். எனக்கு கைக்குழந்தை உள்ளதால், இரவு தங்குவதற்கு, தாய் சென்றிருந்தார். இரவு, ஐ.சி.யு., பிரிவில் சேர்க்கப்பட்டு, இரண்டு மணி நேரம் வைத்திருந்தனர். பின், எம்.எம்., 1 வார்டுக்கு மாற்றினர். வார்டில் உதவுதற்கு ஒருவரும் முன்வரவில்லை.
மறுநாள் 19ம் தேதி காலை 7.30 மணிக்கு நான் சென்றேன். டியூட்டி டாக்டர்கள் காலை 11.30 மணிக்கு வந்தனர். ரத்த பரிசோதனை, ஸ்கேன் முடிவுகள் வரட்டும் என டாக்டர்கள் கூறி விட்டனர்.
11.30 மணிக்கு ஸ்கேன் எழுதிக் கொடுத்தனர்; மதியம் 2.30 மணிக்கு தான் ஸ்ட்ரெக்சர் கொடுத்து அழைத்துச் சென்றனர். ஆட்கள் இன்றி நானும் சேர்ந்து தள்ளிச்சென்றேன்.
உடன் வந்த நபர் திட்டிக்கொண்டே வந்தார்; 200 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டார். 3.30 மணி வரை எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை, ஒரு முறை பிரசர் ஊசி போட்டனர்.
தந்தை உடல் நலம் மோசமாக இருந்ததால், சண்டையிட்டு, 'டிஸ்சார்ஜ்' செய்ய கூறினோம். இரவு 8 மணிக்கு 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு எம்.ஆர்.ஐ., எடுத்து பார்த்தபோது, மூளையில் ரத்தக்கசிவு இருப்பதால் சுயநினைவு இழந்து விட்டதாகவும். பிழைப்பது கஷ்டம் என்றும் கூறினர்.
முதலுதவி சரியாக செய்யவில்லை என்பதையும், டாக்டர்கள் தெரிவித்தனர். 21ம் தேதி என் தந்தை இறந்து விட்டார். அரசு மருத்துவமனையில் தாமதிக்காமல் சிகிச்சை துவக்கி இருந்தால், காப்பாற்றி இருக்கலாம். முதல்வர் தனிப்பிரிவுக்கு புகாரும் அளித்துள்ளோம். தந்தை இறப்புக்கு அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முகமது பிலால், தனது மனைவியை உடல் நல பிரச்னைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும், சிகிச்சையை தாமதிப்பதுடன்; அடிப்படை வசதிகள் ஏதும் சரியில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
சில மருந்துகளை வெளியிடங்களில் வாங்க கூறுவதாகவும், சிகிச்சையை தாமதிப்பதால் பலர் இறக்கும் சூழல் தொடர்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''முதல்வர் தனிப்பிரிவு புகார் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அளித்த புகார் ஆகியவை என் கவனத்துக்கு வந்துள்ளது.
உடனடியாக விசாரணை துவக்கப்பட்டுள்ளது. சற்று அவகாசம் அவசியம்; முழுமையாக விசாரித்து விட்டு தகவல் அளிக்கப்படும்,'' என்றார்.