குரூப் 2 தேர்வு பயிற்சிக்கு கட்டணம், தங்குமிடம் ப்ரீ
குரூப் 2 தேர்வு பயிற்சிக்கு கட்டணம், தங்குமிடம் ப்ரீ
ADDED : ஜன 02, 2025 05:53 AM
கோவை; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) வாயிலாக, முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோவால் வழங்கப்படும். www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.
