'காலி இடங்களை நிரப்பினால் மின்வெட்டு பிரச்னை தீரும்'
'காலி இடங்களை நிரப்பினால் மின்வெட்டு பிரச்னை தீரும்'
ADDED : ஜூன் 15, 2026 11:25 PM

கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் நிர்வாகிகள் பேசியதாவது:
மின் வாரியத்தில் 1.4 லட்சம் பணியிடங்கள் உள்ளன. அதில் 65 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. களப்பணியாளர்கள் இல்லாவிட்டால், மின் வினியோகம் சீரடையாது.
2013ல், 4,000 ஐ.டி.ஐ. ஹெல்பர் பணியிடங்களும், 2015ல் 400 கள உதவி பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
அதன்பின் 10 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு இல்லை. 2025ல், கள உதவியாளர் தேர்வை லட்சக்கணக்கான ஐ.டி.ஐ., மாணவர்கள் எழுதினர். இவர்களில் 9,600 பேர் முழுமையாக தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர். அவர்களை உடனே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர். நடவடிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க செயலாளர் தினேஷ், தலைவர் ராஜா, மின்வாரிய ஊழியர் சங்க நிர்வாகி முருகன் பங்கேற்றனர்.
