/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறி ஏர்ஹாரன் பொருத்தியதால்.. அபராதம் . 13 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடி
/
விதிமீறி ஏர்ஹாரன் பொருத்தியதால்.. அபராதம் . 13 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடி
விதிமீறி ஏர்ஹாரன் பொருத்தியதால்.. அபராதம் . 13 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடி
விதிமீறி ஏர்ஹாரன் பொருத்தியதால்.. அபராதம் . 13 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜன 28, 2026 05:10 AM

காந்திபுரம், : தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, காந்திபுரத்தில் நேற்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை நடத்தினர். ஏர் ஹாரன் பொருத்தியிருந்த அரசு பஸ் உள்ளிட்ட 13 தனியார் பஸ்களுக்கு தலா 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் பல தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் டவுன் பஸ்களிலும் பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரனின் அலறல் சத்தம், வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் பாடாய்படுத்துகின்றன.
தனியார் பஸ்கள் மட்டுமல்லாமல், சில அரசு பஸ்களிலும் டிரைவர்கள் ஏர்ஹாரன் பொருத்தி மக்களை இம்சைக்கு உள்ளாக்குகின்றனர்.
கோவையில், 37வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, கோவை மத்திய மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், நேற்று காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், திடீர் சோதனை நடந்தது.
அப்போது காந்திபுரத்திலிருந்து செம்மேடு வரை இயக்கப்படும் வழித்தட எண் 14 ஏ அரசு பஸ்சில் ஏர்ஹாரன் பொருத்தியிருப்பதை அதிகாரிகள் கண்டு அப்புறப்படுத்தினர்.
இதே போன்று அவ்வழியே வந்த, எட்டு தனியார் பஸ்கள், ஐந்து அரசு பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு, ஏர்ஹாரன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில், ''சாலை பாதுகாப்பு மாதத்தில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் ஏர்ஹாரன்கள் பொருத்துவதை தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினரின் உதவியோடு களமிறங்கியுள்ளோம்,'' என்றார்.
களமிறங்குவதெல்லாம் சரி... சாலை பாதுகாப்பு வாரத்தில் மட்டும்தான் இது போன்று ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்வீர்களா என்பதே, நேற்று பொதுமக்கள் பலர் எழுப்பிய கேள்வி.

