/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் வியாபாரிகள் ரூ.3.5 கோடி வாடகை நிலுவையால் இடியாப்பச் சிக்கல்!சில்லறை மார்க்கெட் இடிக்க, புதிய மார்க்கெட் திறக்க...
/
மீன் வியாபாரிகள் ரூ.3.5 கோடி வாடகை நிலுவையால் இடியாப்பச் சிக்கல்!சில்லறை மார்க்கெட் இடிக்க, புதிய மார்க்கெட் திறக்க...
மீன் வியாபாரிகள் ரூ.3.5 கோடி வாடகை நிலுவையால் இடியாப்பச் சிக்கல்!சில்லறை மார்க்கெட் இடிக்க, புதிய மார்க்கெட் திறக்க...
மீன் வியாபாரிகள் ரூ.3.5 கோடி வாடகை நிலுவையால் இடியாப்பச் சிக்கல்!சில்லறை மார்க்கெட் இடிக்க, புதிய மார்க்கெட் திறக்க...
ADDED : ஆக 28, 2024 01:26 AM

கோவை:உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் வளாகத்தில், கடை நடத்துவோரில் சிலர், 3.5 கோடி ரூபாய் வாடகை நிலுவை வைத்திருக்கின்றனர். அதனால், அம்மார்க்கெட்டை இடிக்கவும், கழிவு நீர் பண்ணை வளாகத்தில் கட்டியுள்ள புதிய மார்க்கெட்டை திறக்கவும், சிக்கல் எழுந்திருக்கிறது.
கோவை - செல்வபுரம் பைபாஸில், உக்கடம் பெரியகுளத்துக்கு எதிரே, சில்லறை மீன் மார்க்கெட் செயல்படுகிறது. 2011ல் ரூ.1.37 கோடியில் கட்டப்பட்ட இந்த மார்க்கெட்டில், 72 கடைகள் உள்ளன. 32 கடைகளை ஏலம் எடுத்தவர்கள், மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாததால், 'சீல்' வைக்கப்பட்டது.
இச்சூழலில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக, சி.எம்.சி., காலனியில் இருந்த துாய்மை பணியாளர்களின் வீடுகளை, இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உறுதியளித்தது. அதன்படி, அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டு, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், தற்காலிக குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. 'சி.எம்.சி., காலனி பேஸ்-2 ' என்ற பெயரில், ரூ.49.40 கோடியில், 520 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு மீன் மார்க்கெட்டை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, அவ்விடத்தை தங்களுக்கு தர வேண்டுமென, மாநகராட்சிக்கு வாரியம் கோரிக்கை விடுத்தது.
இதையேற்ற மாநகராட்சி நிர்வாகம், உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தது. அங்கு வியாபாரிகள் இணைந்து, எட்டு கோடி ரூபாய் மதிப்பிட்டில், 72 கடைகள் கட்டினர்.
ரூ.3.5 கோடி நிலுவை
இந்த மார்க்கெட்டை திறக்க முயன்றபோது, சில்லரை மீன் மார்க்கெட்டில் கடை நடத்துவோரில் சிலர், முறையாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதை, மாநகராட்சி கண்டுபிடித்தது. இவ்வகையில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ.3.5 கோடி செலுத்தாமல் வாடகை நிலுவை வைக்கப்பட்டிருக்கிறது.
அதனால், புதிய மார்க்கெட்டை திறப்பதிலும், கடைகளை ஒதுக்கீடு செய்வதிலும் சிக்கல் எழுந்தது. வாடகையை முழுமையாக செலுத்தி, தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) பெற்றுக் கொடுத்தால் மட்டுமே, புதிய மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படும் என, 'செக்' வைக்கப்பட்டது. இருந்தாலும், நிலுவைத்தொகை செலுத்த வியாபாரிகள் முன்வரவில்லை.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட்டில், கடை நடத்துவோரில் சிலர் ரூ.3.5 கோடி நிலுவை வைத்துள்ளனர். அத்தொகையை செலுத்தாதவர்களுக்கு, புதிய கடையை ஒதுக்க வாய்ப்பில்லை. அக்கடை ஒதுக்கீடு பெற்றவர்கள் வேறு; புதிய மார்க்கெட்டை கட்டியவர்கள் வேறு என்று கூறுகிறார்கள்.
புதிய மார்க்கெட் கடைகள், ஏல முறையில் மட்டுமே ஒதுக்கப்படும். வியாபாரிகளால் கட்டப்பட்டது என்பதால், அந்த புதிய மார்க்கெட்டை, மாநகராட்சி 'பர்ச்சேஸ்' செய்ய தயாராக இருக்கிறது.
மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்த பின், ஏலம் நடத்தி, கடை ஒதுக்கீடு செய்யப்படும். சில்லறை மீன் மார்க்கெட்டில் வாடகை செலுத்தாதவர்களுக்கு, இங்கு கடை ஒதுக்க வாய்ப்பில்லை. இந்நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, புதிய மார்க்கெட் திறக்கப்படும்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.