/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.. பாதுகாப்பா இருங்க! குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுரை
/
மழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.. பாதுகாப்பா இருங்க! குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுரை
மழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.. பாதுகாப்பா இருங்க! குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுரை
மழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.. பாதுகாப்பா இருங்க! குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுரை
ADDED : ஜூலை 23, 2025 09:08 PM

பொள்ளாச்சி: 'தொடர் பருவமழையால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிப்பதுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடைவிடாமல் பருவமழை பெய்கிறது. இதனால், ரோட்டோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்களால், மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தினமும், 1,500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். அதில், 100 பேர், காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற வருகின்றனர்.
பெரும்பாலும், சளி, காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இதில், காய்ச்சலுடன் வருவோருக்கு பரிசோதனை செய்ததில், மூன்று பேருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வருவோரிடம் இருந்து, மலேரியா பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:
மழை காலத்தில், டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகமாக உள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்றவையும், அசுத்தமான நீர் மற்றும் உணவு வாயிலாக பரவும் டைபாய்டு போன்றவை, மழைக்காலங்களில் வரக்கூடியவை. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் பகுதியில் வலி மற்றும் தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சல் அறிகுறிகளாகும். மலேரியா அனாபில்ஸ் கொசுக்களால் பரவுகிறது. காய்ச்சல், குளிர், வியர்வை, தலைவலி, உடல்வலி ஆகியவை அறிகுறிகளாகும்.
டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டின் சுற்றுப்பகுதியை துாய்மையாக வைத்திருப்பதுடன், தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல், சால்மோனெல்லா டைபி பாக்டீரியாக்களால் பரவுகிறது. அதேபோன்று, வைரஸ் கிருமிகளால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அசுத்தமான உணவு, தண்ணீரை குடிப்பதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நன்கு வேகவைத்த உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.