/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரடி நியமனங்களில் உள் ஒதுக்கீடு வனத்துறை களப்பணியாளர்கள் கோரிக்கை
/
நேரடி நியமனங்களில் உள் ஒதுக்கீடு வனத்துறை களப்பணியாளர்கள் கோரிக்கை
நேரடி நியமனங்களில் உள் ஒதுக்கீடு வனத்துறை களப்பணியாளர்கள் கோரிக்கை
நேரடி நியமனங்களில் உள் ஒதுக்கீடு வனத்துறை களப்பணியாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 17, 2025 02:12 AM
கோவை: வனத்துறை நேரடி நியமனங்களில், காவல்துறையில் உள்ளது போன்று, கீழ்நிலைப் பணியாளர்களுக்கும், களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, வன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது:
முன்பு, வனசீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வாயிலாக நடைபெற்று வந்த, வனத்துறை நேரடி நியமனம் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்த நியமனத்தில், வனவர், வனச்சரக அலுவலர் போன்ற நேரடி நியமனங்களுக்கு, கீழ் நிலையில் பணியாற்றும் வனச்சீருடை களப்பணியாளர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். காவல் துறை (ஜி.ஓ., 1054, தேதி 13.07.1995), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதேபோன்று, வனத்துறையிலும் வழங்கப்பட வேண்டும்.
மேலும், வனத்துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர், வனச்சரக அலுவலர் போன்ற அனைத்து நேரடி நியமனங்களில் 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். பெண் களப்பணியாளர்கள், மகப்பேறு விடுப்புக்குப் பின், விரும்பும் இடத்தில் பணிபுரிய ஆணை வழங்க வேண்டும். இந்த நடைமுறையும் காவல்துறையில் உள்ளது.
காவல் துறையில் உள்ளதைப் போன்று, வனத்துறையினருக்கும் இந்த சலுகைகளை வழங்குவதால், அரசுக்கு கூடுதல் நிதிச் செலவுகள் ஏதும் இல்லை. எனவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.