/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புலிகள் காப்பகத்தில்'டிரோன்' கேமரா பயன்படுத்த தடை; வனத்துறை எச்சரிக்கை
/
புலிகள் காப்பகத்தில்'டிரோன்' கேமரா பயன்படுத்த தடை; வனத்துறை எச்சரிக்கை
புலிகள் காப்பகத்தில்'டிரோன்' கேமரா பயன்படுத்த தடை; வனத்துறை எச்சரிக்கை
புலிகள் காப்பகத்தில்'டிரோன்' கேமரா பயன்படுத்த தடை; வனத்துறை எச்சரிக்கை
UPDATED : ஜன 17, 2024 05:36 AM
ADDED : ஜன 16, 2024 10:54 PM

வால்பாறை;ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 'டிரோன்' கேமரா பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் அரிய வகை வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க, வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், சமீப காலமாக வனத்துறை கட்டுப்பாட்டை மீறி சுற்றுலாபயணியர், இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்வதும், வனவிலங்குகளுக்கு உணவு வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள ரிசார்ட்களில், தங்கிச்செல்லும் சுற்றுலாபயணியர், 'டிரோன்' கேமரா வாயிலாக படம் பிடித்தும் வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் சுற்றுலாபயணியரின் அத்துமீறலை தடுக்க, போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் அவர்களிடம் வனவிலங்குகளை காட்டுவதாக கூறி, சிலர் வாகனங்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் அழைத்துச்செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
புலிகள் காப்பகத்தில் அத்துமீறும் சுற்றுலாபயணியர் மீதும், டிரோன் கேமரா பயன்படுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும், டிரோன் கேமரா பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் தற்போது சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்வதால், வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிமுறையை மீறி 'டிரோன்' கேமரா வாயிலாக படம் எடுத்தால், 25 ஆயிரம் ரூபாய் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

