/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் அனுமதியின்றி 'ரிசார்ட்கள்': கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
/
எஸ்டேட்டில் அனுமதியின்றி 'ரிசார்ட்கள்': கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
எஸ்டேட்டில் அனுமதியின்றி 'ரிசார்ட்கள்': கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
எஸ்டேட்டில் அனுமதியின்றி 'ரிசார்ட்கள்': கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
ADDED : ஜன 28, 2024 08:52 PM
வால்பாறை;வால்பாறையில், விதிமுறையை மீறி செயல்படும் 'ரிசார்ட்'களை பூட்டி 'சீல்' வைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில், பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் வழித்தடங்களை எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமித்துள்ளன. அங்கு சுற்றுலா பயணியர் தங்கி செல்ல வசதியாக 'ரிசார்ட்'கள் கட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான ரிசார்ட்கள் உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளன. யானை வழித்தடத்தில் உள்ள பங்களாக்கள் ரிசார்ட்களாக மாற்றப்பட்டு, சுற்றுலா பயணியரை விதிமுறையை மீறி தங்க வைக்கின்றனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், ரிசார்ட்கள் துவங்க வேண்டும் என்றால், வனத்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி துறை, மலையிட பாதுகாப்பு குழுமம், இயக்குனரகம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து முறையாக அனுமதி பெற வேண்டும்.
ஆனால், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ரிசார்ட்கள், எவ்வித அரசு துறை அனுமதியும் பெறாமல் நடத்தப்படுகிறது. ரிசார்ட் நடத்துபவர்கள் அங்கு தங்குபவர்களின் விபரம் குறித்து போலீசாருக்கும் தெரிவிப்பதில்லை.
இதனால், குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் யானை வழித்தடத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.
விபரம் சேகரிப்பு
-இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்களில் தங்கும் சுற்றுலா பயணியரின் விபரங்கள் குறித்த தகவல் போலீசாருக்கு முறையாக தெரிவிப்பதில்லை. முறையாக பதிவேடுகளும் பராமரிக்கப்படுவதில்லை.
அனைத்து தங்கும் விடுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான தங்கும் விடுதிகளில் கேமரா பொருத்தப்படவில்லை. அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, கூறினர்.
'கவனிப்பு' நடக்குது
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் அரசின் முறையான அனுமதி பெறாமல், யானை வழித்தடத்தில், 60க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் 'கவனிப்பு' பெறுவதால், ரிசார்ட்கள் குறித்து கண்டு கொள்வதில்லை என்று புகார் கிளம்பியுள்ளது.