ADDED : மே 28, 2026 05:50 AM
சூலுார்: அரசூர் குப்பை கிடங்கில் இருந்து குப்பை அள்ளிய லாரிகள் சிறை பிடிக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது அரசூர் ஊராட்சி. இங்கு சேகரமாகும் குப்பை, அரசூர் பிரிவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, கிடங்கில் இருந்து லாரிகள் வாயிலாக குப்பை எடுத்து செல்லப்பட்டு வந்தது. தகவலறிந்து அங்கு சென்ற கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் முருகேசன் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு, லாரிகளை சிறைப்பிடித்தனர். எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலகம், நீலம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். லாரிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பொதுமக்கள் கூறியதாவது:
ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், கடந்த வாரத்தில் இரவில் வந்து குப்பையை லாரிகளில் எடுத்து சென்று, அன்னுார் பகுதியில் உள்ள கிணறுகளில் கொட்டியதை அறிந்த அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் குப்பையை எடுத்து சென்றதால் லாரிகளை சிறை பிடித்தோம். இங்கு குப்பையை கொட்டக் கூடாது என, பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் வீடுகளில் இருக்க முடியவில்லை. அடிக்கடி தீ வைக்கப்படுவதால், புகையால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. குப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
