/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டத்தை கூட்டுறேன்; பார்க்கிறாயா? போலீசாரை மிரட்டியவர் எண்ணுகிறார் கம்பி
/
கூட்டத்தை கூட்டுறேன்; பார்க்கிறாயா? போலீசாரை மிரட்டியவர் எண்ணுகிறார் கம்பி
கூட்டத்தை கூட்டுறேன்; பார்க்கிறாயா? போலீசாரை மிரட்டியவர் எண்ணுகிறார் கம்பி
கூட்டத்தை கூட்டுறேன்; பார்க்கிறாயா? போலீசாரை மிரட்டியவர் எண்ணுகிறார் கம்பி
ADDED : பிப் 12, 2024 06:08 AM

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு, மைவி3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் இயங்கி வருகிறது.
இந்நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்த் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நிர்வாகிகள், 180 பேருடன் வந்த சக்தி ஆனந்த், தங்களை பற்றி தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளித்தார்.
அத்துடன், போலீஸ் கமிஷனரை சந்தித்தே ஆக வேண்டும் எனக்கூறி, திடீரென ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கலைந்து செல்ல கூறியும் மறுத்த சக்தி ஆனந்த், ரேஸ்கோர்ஸ் போலீசாரை மிரட்டும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, 'லட்சக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டுவேன்; திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்; தர்ணாவில் ஈடுபடுவேன்' என, ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, போலீசார் சக்தி ஆனந்த், அவரது நிர்வாகிகள், 180 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் முன், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் திரள முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இரவு, 11:30 மணிக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, சக்தி ஆனந்தை மீண்டும் கைது செய்து, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை, 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.