/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த விலைக்கு தங்கக்கட்டி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
/
குறைந்த விலைக்கு தங்கக்கட்டி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு தங்கக்கட்டி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு தங்கக்கட்டி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
ADDED : அக் 16, 2024 06:10 AM

தொண்டாமுத்துார் : கோவையில், குறைந்த விலைக்கு தங்கக்கட்டி தருவதாகக்கூறி, போலி தங்கக்கட்டி கொடுத்து, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த வடமாநிலத்தவர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலுமணி, 29, மில் மேற்பார்வையாளர். இவருடன் அதே மில்லில் பணிபுரிந்து வந்த, அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சாத் அலி என்பவர், தன் நண்பர்களிடம், 500 கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளதாகவும், அதை, 15 லட்சம் ரூபாய்க்கு தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய வேலுமணி, தன் நண்பரான பாட்ஷாவிடம் கூறியுள்ளார். இருவரும், 2 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து, சம்சாத்அலியின் நண்பர்களான கேரளாவில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த யாசின், முகமதுஅலி, ஜசிதுல் இஸ்லாம் ஆகிய மூவருடன் பேசியுள்ளனர்.
நேற்று முன்தினம், கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டு, போன் செய்யுமாறு, யாசின் கூறியுள்ளார். அதன்படி, வேலுமணியும் பாட்ஷாவும், திருச்சியில் இருந்து கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, யாசினை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
தொண்டாமுத்துாரில் உள்ள வஞ்சியம்மன் நகருக்கு வருமாறு, யாசின் கூறியுள்ளார். இருவரும் அதன்படி யாசின், முகமதுஅலி, ஜசிதுல் இஸ்லாம் ஆகியோரை சந்தித்து, 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். யாசின், வேலுமணியிடம் தங்கக்கட்டியை கொடுத்தார்.
மீதி பணத்தை, தங்க கட்டியை விற்ற பின் தருவதாக, வேலுமணி கூறியுள்ளார்.
அப்போது, தங்கக்கட்டி உண்மைதானா என்பதை உறுதி செய்ய, வேலுமணி தங்கக்கட்டியை வெட்டி பார்த்துள்ளார்.
தங்கக்கட்டியின் மேல்புறம் தங்க முலாமும், உள்புறம் செம்பும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைக்கண்டு யாசின், முகமதுஅலி, ஜசிதுல் இஸ்லாம் ஆகியோர் தப்பி ஓட முயற்சித்தனர்.
பணத்துடன் யாசின் தப்பி சென்ற நிலையில், முகமதுஅலி, ஜசிதுல் இஸ்லாம் ஆகியோரை, வேலுமணியும் பாட்ஷாவும் பிடித்து, போலீசில் புகார் அளித்தனர். தொண்டாமுத்துார் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து, முகமதுஅலி, ஜாசுதுல் இஸ்லாம் ஆகியோரை, கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த போலி தங்கக்கட்டியையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய யாசினை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.