ஊருக்கு செல்லும் கர்ப்பிணிகளின்... நலமறிய ஆவல்!:'ஹாலிடே கால்' செய்கிறது மாநகராட்சி
ஊருக்கு செல்லும் கர்ப்பிணிகளின்... நலமறிய ஆவல்!:'ஹாலிடே கால்' செய்கிறது மாநகராட்சி
UPDATED : செப் 14, 2026 04:22 AM
ADDED : செப் 13, 2026 09:43 PM

கோவை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் கர்ப்பிணிகளை, 'ஹாலிடே கால்' மூலம் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு கண்காணிக்கிறது.
மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் அளித்த தகவலின்படி, மாநகரில் 10,830 பதிவு செய்த கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது.
மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி கூறியதாவது:
கர்ப்பிணிகள் சாதாரண விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்லும்போது தகவல் சொல்வதில்லை. இது பண்டிகை காலம்.
விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, புத்தாண்டு பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருகின்றன.
கர்ப்பிணிகள் தகவல் சொல்லாமல் வெளியூர் செல்வர். திடீரென சிக்கல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அவர்கள் குறித்த முழு தகவல் மருத்துவமனைகளுக்கு தெரியாது.
இதனால் லீவு நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நர்ஸ்கள், கர்ப்பிணிகளை அழைத்து, 'ஊருக்கு செல்கிறாரா' என கேட்பர். எந்த ஊருக்கு செல்கிறார்களோ, அந்த மருத்துவமனைக்கு அழைத்து கர்ப்பிணி பற்றிய தகவல் கூறுவோம்.
பன்றி காய்ச்சல் கர்ப்பிணிகளை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் அவர்களை தொடர்பு கொண்டு எப்படி கை கழுவுவது, காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று கேட்போம். உடலில் சிக்கல் உள்ள கர்ப்பிணிகளுக்கு, 4 மணி நேரத்துக்கு ஒருமுறை பேசி உடல்நிலையை கண்காணிக்கிறோம்.
மாநகராட்சியில் பதிவு செய்த 10,830 கர்ப்பிணியரில் 5,113 பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை, அனீமியா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,030 பேர் வெளியூர் சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் 33 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தாய் சேய் நல கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
