ADDED : செப் 05, 2026 05:22 PM
: கோவை: விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருது, இந்த ஆண்டு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக, கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கு ‘கி.ரா.விருது’ வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயம் கொண்டது. விருது தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது.
வரும் 27ம் தேதி பீளமேடு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி அரங்கில் நடக்கும் விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதை வழங்க உள்ளார்.
திருப்பூரில் எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன், ஆறு நாவல்கள் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நுால்களை எழுதி இருக்கிறார்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருந்து பல நுால்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இவரது இலக்கியப் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக விளக்கு விருது, கண்ணதாசன் விருது, ஸ்பேரோ விருது, கதா விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
