ADDED : மார் 16, 2024 11:48 PM
அன்னூர்;நூறு நாள் திட்டத் தொழிலாளர்களுக்கு, ஆறு வார நிலுவை சம்பளம் வழங்கப்பட்டதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளிலும் தினமும் 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில், கடந்த வாரம் வரை பணிபுரிந்து வந்தனர்.
தொழிலாளர்களுக்கு நவம்பர் முதல், சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை இருந்தது. தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், நிலுவை சம்பளத்தில், ஆறு வார சம்பளம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
'எனினும், மேலும் ஏழு முதல் எட்டு வாரம் வரை சம்பளம் நிலுவை உள்ளது. அவற்றையும் விரைவில் வழங்க வேண்டும்' என தொழிலாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

